திருப்பதி லட்டு விவகாரம் பொய்யான கட்டுக்கதைகள் : ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக ஆய்வகத்தின் ஆய்வறிக்கை வெளியான தகவல் குறித்து ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே எங்கள் அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டுகிறார். கடவுளின் பெயரால் அவர் அரசியல் செய்கிறார். இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?
திறன் மேம்பாட்டு கழக முறைகேடு வழக்கில் கைது செய்ததற்காக பழிவாங்குகிறார் சந்திரபாபு நாயுடு. அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். சந்திரபாபு நாயுடு சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கட்டுக்கதைகள். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தேசிய அளவிலான அங்கீகாரம் வாங்கும் நிறுவனங்களிடமிருந்தே நெய் கொள்முதல் செய்யப்பட்டது. எங்களது ஆட்சியில் டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்யவில்லை. மாமிச கொழுப்பு கலந்ததாக பொய் கூறுவது நியாயமா?
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பலரும் வீதிக்கு வந்துள்ளனர். தர்மத்துக்கு எதிரான செயல்பாடுகள் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொய் வழக்குகளை போடுவதையே முதன்மையானதாக கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அவர் அனைத்து விசயங்களையும் திசை திருப்புகிறார். அரசியலுக்காக கடவுளின் பெயரை அவர் பயன்படுத்துவது கீழ்த்தரமானது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சந்திரபாயு நாயுடு அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது. எனது ஆட்சிக்காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Leave a comment